Monday, August 18, 2008

தாயே கருமாரி! எங்கள் தாயே கருமாரி! - 2

மண்ணளக்கும் மகமாயி ஆதி சக்தி கருமாரி


அன்பர் kaNNapiran Ravisankar(KRS) அவர்கள் பொய்கை திருச்சாம்பர் பொய்கை என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தையும், திருஞான சம்பந்தரின் பதிகத்தையும் வேண்டினார் எனவே முதல் பதிவுக்கு இணைப்பதிவாக இப்பதிவு, பின்னூட்டத்தில் இவ்வளவும் எழுதுவது சிரமம் என்பதால்.

அசுரர்களை அழிக்க சிவபெருமான் திருக்கயிலாயத்திலிருந்து புறப்பட்ட போது ஐந்தொழில் புரியும் பொறுப்பை ஆதி பராசக்தி அன்னை ஏற்றாள். ஐயன் தனது யக்கையிலிருந்து சாம்பல் பெற்றாள். ஏழு சக்தியாக உருவெடுத்து அச்சாம்பலால் உலக மக்கள் துயர் தீர்த்தாள் அன்னை.

இவ்வாறு திருவேற்காட்டில் அன்னை அருள் புரிந்து கொண்டிருக்கும் போது முருகபபெருமான் அன்னையைக் காண வந்தார் உடன் தேவர்களும், முனிவர்களூம் வந்தனர். தன் அருமை மைந்தனை மகிழ்விக்க அன்னை இங்கே பொம்மையானாள் ஆமாம் நாகமாக உருவெடுத்தாள் . கருநாகமாக குண்டலினி சக்தியாக நின்று ஆடினாள். காண்பரிய காட்சி கண்து முருகனும் தேவாதி தேவர்களும், முனிவர்களும் மகிழ்ந்தனர்.

மகனை மகிழ்வித்த அன்னை சுய ரூபம் பெற்று அனைவருக்கும் திருச்சாம்பல் வழங்கினார். மகிழ்ச்சியாக அந்த திருநீற்றை பெற்றுக் கொண்ட அழகன் முருகன். அன்னையே முன்பு சூரனை அழிக்க சக்தி வேல் வழங்கினீர் அவ்வேலால் வேலாயுத தீர்த்தம் அமைத்தேன். தற்போது திரிநீறு வழங்கி உள்ளீர்கள். இந்த திருநீற்றின் பெயரால் ஒரு பொய்கை அமைக்கின்றேன் என்று திருச்சாம்பர் பொய்கை உண்டாக்கினார் குமரக்கடவுள்.

முருகா! திருநீறு பெற்று திருநீற்றுப் பொய்கை அமைக்கிறாய் அதில் நீராடுபவர்களுக்கு இவ்வாறு வரம் அளிக்கிறேன் என்று வரம் தந்தால் கருணை மாரி கருமாரி.

திருவேற்காட்டுப்பதிகம்
முதலாம் திருமுறை

திருஞான சம்பந்தத் அருளியது
ஒள்ளியது உள்ளக் கதிக்காம் இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தோர் இவ்வுலகில்
தெள்ளியார் அவர் தேவரே!
ஆடல் நாகம் அசைத்து அளவில்லதோர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ்வுலகில்
சேடராகிய செல்வரே!
பூதம்பாட புறங்காட் டிடைஆடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்(கு)
ஏதம் எய்துதல் இல்லையே
அழ்கடல் என கங்கை கரந்தவன்
வீழ்சடையினன் வேற்காடு
தாழ்வுடை மனத்தால் பணிந்து ஏத்திடப்
பாழ்படும் அவ்ர் பாவமே
காட்டினால் அயர்த்திருக் அக்காலனை
வீட்டினால் உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஒட்டினார் வினை ஒல்லையே!
தொலினால் உடைமேவ வல்லான் சுடர்
வேலினால் உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவ்ர் தீர்க்கமே
மூரல் வெண்மதி சூடுமுடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.
பரக்கினார் படுவெண் தலையில் பலி
விரக்கினான் உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருங்கினானை நினைமினே
மாறிலா மலரானோடு மாலவன்
வேறலான் உறை வேற்காடு
ஈறிலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை குற்றமே.
விண்டமா பொழில் திருவேற்காடு
கண்டு நம்பன் கழல் பேணி
சண்பை ஞான சம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட குணமாமே.
KRS ஐயா தாங்கள் கேட்டுக் கொண்டபடி ஆளுடையப்பிள்ளையின் கொஞ்சு தமிழ்ப் பாடலை ( சம்பந்தப்பெருமான் பிள்ளை அல்லவா அதனால், அப்பருடையது கெஞ்சு தமிழ், சுந்தரர் எம்பிரான் தோழர் அல்லவா எனவே அவரது மிஞ்சு தமிழ்) பதிவிட்டுள்ளேன், சிவன் பாட்டில் அருமையான கதையுடன் வழங்குங்கள்.

Thursday, August 14, 2008

தாயே கருமாரி! எங்கள் தாயே கருமாரி!

இந்த வருடம் ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள், அன்னையை அன்புடன் வழிபட ஒரு நாள் அதிகமாக கிடைத்திருக்கின்றது அவள் கருணையினால். இந்த நிறை வெள்ளிக்கிழமையன்று, "அலை கடலில் உதித்த ஆதி லக்ஷ்மித்தாயை வரலக்ஷ்மியாக அவரவர்கள் இல்லத்தில் வரவேற்று எப்போதும் எங்கள் இல்லத்தில் தங்கியிரு திருமகளே!" என்று வ்ரம்வேண்டும் நாளன்று முப்பெரும்தேவியாய் அருள் பாலிக்கும் கருமாரியம்மன் தரிசனம் பெற்று உய்வோமாக.



மண்ணளக்கும் மகமாயி ஆதி சக்தி கருமாரி
ஈருவாய் கோலம் கொண்டு அருள் பாலிக்கும் அன்னை


மாரியம்மன் வழிபாடு தமிழகம் எங்கும் பரவியுள்ளது . மண்ணளக்கும் மகமாயின் ஆலய்ம் இல்லாத கிராமமே தமிழ் நாட்டில் இல்லை என்று கூறிவிடலாம். மாரி என்றால் மழை. தன்து அருள் மழையைப் பெய்யும் அம்மனுக்கு அதுவே திருநாமமாக அமைந்தது. குறிப்பாக வெயில் காலங்களில் தோன்றும் அம்மை போன்ற கொள்ளை நோய்களை தீர்த்து காப்பவள் மாரியம்மன் என்பது ஐதீகம். அந்த மாரித்தாய் சென்னையில் திருவேற்காட்டில் கருமாரியாக எழுந்தருளி மஞ்சளால் மகிமை புரிந்து, எலுமிச்சம் பழத்திலே அதிசயம் காட்டி , வேப்பிலையால் வெப்பு நோய் தீர்த்து, சாம்பலினால் உயிர் காப்பவளாய் அருள் பாலிக்கின்றாள்.
வேதங்களின் முதல் வடிவாகி தேவதை பதினைந்தை உடன் கொண்டு அசுரனின் உடல் தன்னை மாய்த்து நின்று மாயை சிங்கத்தின் மீது பவனி வரும் பாலாம்பிகை தீராத வினை தீர்க்கும் திருநீறும், சரண் புகுந்தோர்க்கு சாம்பலும் அளித்து பக்தர்களின் குறையாவும் தீர்த்து வைக்கின்றாள். வாருங்கள் இந்த நிறை ஆடி வெள்ளியன்று கருமாரியம்மன் தரிசனம் பெறுவோம்.


தமிழக்த்தின் தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 32. அவ்ற்றுள் ஒன்று இந்த திருவேற்காடு. திருஞான சமப்ந்தர் இத்தலத்தைப்பற்றி பதிகம் பாடியுள்ளார். இத்தலத்தில் பிரளய காலத்திற்க்குப் பின் வேதங்களே வேல் மரங்களாகி இறைவனை வழிபட்டன. வேலங்காடே வேற்காடு ஆகியது. உலகத்தை சமன் செய்ய தென்னாடு வந்த கும்பமுனி அகத்தியருக்கு சிவபெருமான் திருக்கயிலாய மலையில் தனக்கும் மலையரசன் பொற்பாவை உமையம்மைக்கும் நடந்த திருமண கோலத்தைக் காட்டியருளிய தலம். திருவேற்காட்டில் பாலாம்பிகை என்னும் வேற்கண்ணி அம்மையுடன் வேதபுரீஸ்வரர் திருமணக் கோலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார். எனவே இத்தலம் "வட வேதாரண்யம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய செல்வதற்கு முன்பு அன்னை உமையவள், மலைமகளிடம் இத்தலத்தில் வேல் வாங்கினார் எனவே அன்னை வேற்கண்ணி என்னும் நாமம் பெற்றாள், வேல் பெற்ற வேலனை காமதேனுவின் மகள் நந்தினியின் பால் கொண்டு அபிஷேகம் செய்தன்ர் தேவர்கள் பால் ஆறாக ஓடியது பொங்கிப்பாய்ந்த அந்த பால் ஆறே இன்று பாலி ஆறு என்று அழைக்கபப்டுகின்றது. அன்னை வேற்கண்ணியை துதித்து வேலவன் அங்கே வேலால் ஒரு தீர்த்தம் அமைத்தான் அதுவே வேலாயுத தீர்த்தமாகும்.



63 நாயன்மார்களுள் சூதாடி சிவனடியார்களுக்கு அமுது படைத்த மூர்க்க நாயனார் அவதரித்த தலம் தான் திருவேற்காடு. அருணகிரி நாதர் பாடிய பெருமையுள்ள தலம் .முர்த்தி தலம் கீர்த்தி என்ற மூன்றினாலும் சிற்ப்பு பெற்ற தலமாகும்.

இவ்வளவு பெருமைகள் பெற்ற தலத்திற்கு அருகில் அன்னை உமையவள் வெள்வேல் மரத்தடியில் புற்றுருவாய் தோன்றி பூலோக மக்களை காத்திட கருமாரியாய் உருவெடுத்து அமர்ந்துள்ளாள். இத்தலத்தில் யாரையும் அரவம் தீண்டுவதில்லை, அவ்வாறு தீண்டினாலும் விஷம் ஏறுவதில்லை. அருள் வாக்கு வழியாக வெளிப்பட்டு அனைவருக்கும் அருள் பாலித்து வரும் அன்னையின் அருள் பெற நாடி வரும் கூட்டம் பல கோடி.

பூத வாகனத்தில் கருமாரி

விநாயகர், முருகன், திருமால் , பிரம்மன் பூஜித்த தலம் அஷ்ட திக் பாலகர்கள் வேத நாயகனை பூஜித்த தலம், சூரியன் தன்க்குரிய ஞாயிறன்று அன்னையின் திருநாளாகக் கொண்டு அடியவர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் அன்னையை வேண்டிக் கொண்டதன் பேரில் அதனை ஏற்று ஞாயிறன்று சிற்ப்பு ஆறு கால பூஜை நடைபெறும் தலம்.


திருவேற்காடு பாலாம்பிகையும், திருவலிதாயம் ஜெகதாம்பிகையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையும் ஒரே நாளில் வழிபட இம்மை, மறுமை எல்லா நன்மைகளையும் அடைவர். ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆடி மாதத்திலும் தனனை நாடி வரும் பகத்ர்களின் துயர் தீர்க்கும் அன்னையின் வரலாற்றை காண்போம்.



ஆதி பாராசக்தி, அகிலமும் ஈன்ற அன்னை, அருள், அன்பு, அறம் என்னும் மூவிலை சூலம் கைக் கொண்டு முத்தொழில் நடத்தும் அன்னை, மண்ணளக்கும் மகமாயி , துர்க்கை, மகாகாளி, ஆதிபராசக்தி, மகிஷாசுர மர்த்தனி என்ற சொரூபங்களின் மூலம் தான் கருமாரியம்மன். கருமேகம் போன்று கருணை மழையைப் பொழிபவள். துவாபர யுகத்தில் கம்சன் தன் தங்கை தேவகியையும், வசுதேவரையும் சிறையிலடைத்து அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை கொன்று வந்தான். எட்டாவது குழந்தையாக பரந்தாமன் தேவகி வயிற்றில் கருக்கொண்டான். அப்போது கோகுலத்தில் யசோதையின் வயிற்றில் மாயை என்னும் மகாசக்தி கருக்கொண்டாள். சிறைச்சாலையில் கண்ணன் பிறந்தவுடன் மாயையினால் எல்லோரும் உறங்கி விட்டனர். பிறந்த குழந்தை கண்ணனை வசுதேவர் எடுத்து சென்று கோகுலத்தில் விட்டு விட்டு அங்கிருந்த பெண் குழந்தையை சிறைக்கு எடுத்து வந்தார். மாயை விலகியவுடன் குழந்தை அழுதது. கம்சனுக்கு செய்தி பறந்தது. உடன் விரைந்து வந்த கம்சன் பெண் என்றும் பாராமல் அக்குழந்தையை கொல்ல வாளை வீசினான். அன்னை விசுவரூபம் எடுத்து சிரித்தாள். அடே மூடனே! நான் கருமாறி வந்தவ்ளடா! ஊர் மாறி, பேர் மாறி, உருமாறி, கருமாறி வந்த என்னையா நீ கொல்லப்போகிறாய்! உன்னை கொல்லப் பிறந்தவன் கோகுலத்தின் இருக்கிறாள் என்று மறைந்தாள் அன்னை அவளே ஆதி கருமாரி.



மஞ்சளாள் மங்களம் வழங்கும் கருமாரி அன்னை


மஞ்சள் பட்டில் மின்னும் அருட்கோலம்


ஒரு சமயம் அரக்கர்களின் அட்டூழியம் அதிகமாகியது தேவர்கள் அவர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். முக்கண் முதல்வனிடம் சரணடைந்தனர். தன் குழந்தைகளைக் காக்க மாயா அசுரர்களிடம் போரிட முடிவெடுத்த எம்பெருமான் அப்போது தான் செய்யும் ஐந்தொழிலை செய்யும் பொறுப்பை அன்னையிடம் கொடுத்தார். அன்னைக்கு தன் உடம்பில் இருந்து எடுத்த சாம்பலைக் கொடுத்தார் ச்ர்வேஸ்வரன். சாம்பலைப் பெற்ற தாய் தானே சிவமுமாகி, தானே சக்தியாகி திருநீறு கொண்டு புறப்பட்டாள், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி திருவேற்காடு வந்து ஈருருவாய் கோயில் கொண்டாள். ஒன்று கருணையே வடிவான அமர்ந்த நிலைக் கோலம். ஐம்பூதங்களே அம்மனுக்கு ஐந்தலை நாகமாக குடை பிடிக்க ஞான ஒளி வடிவாக விளங்கும் கோலம் ஒன்று. மற்றொன்று வானளாவிய விசுபரூப கோலம், அகிலம் நடுங்கும் என்று திருமால் வேண்ட கடைக்கண் மட்டுமே காட்டும் கோலம் கொண்டாள், தலை ம்ட்டும் வெளியே தெரிய கரு உருவில் மண்மாதவுடன் ஐக்கியமானாள் அன்னை. பின் கருநாக உருவில் அங்கே அமர்ந்தாள் அன்னை. சிவபெருமானிடம் பெற்ற திருநீறு கொண்டு தேவியவள் தன் இச்சா மந்திர சக்தியால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அந்தரி, வானத்தி, பார்ப்பனி என்று உருவெடுத்து காக்கின்றாள். தமக்கையர் அறுவரும் அருகிலிருந்து திரிசூலம் தனை நாட்டி வாழ்வளித்த இறைவி கருமாரி திருவேற்காட்டில் இன்னருள் புரிய குடிகொண்டாள். பின் இந்த கலி காலத்தில் புற்றிலிருந்து தன்க்கொரு கோயில் எழச்செய்து அருள் பாலிக்கின்றாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அன்னை கருமாரி.



கருமாரி என்பதில்

க - கலை மகள்

ரு - ருத்ரி (மலை மகள்)

மா - திருமகள்

ரி - ரீங்காரி



அதாவது கலைமகளும். மலைமகளும், திருமகளும் ஒரு சக்தியாய் உள்வயப்பட்டு ரீங்காரமாகிய ஓங்காரத்திலே உறையும் ஆதிபராசக்தி. மேலும் க - கஞ்சன் ( பிரம்ம தேவன்), ரு- ருத்ரன், மா - திருமால் ரீ- ரீங்கார பீடம். அதாவது ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்தொழில் புரியும் அன்னை கருமாரி.





ஒரு தைப்பூச நன்னாள் அன்று பொதிய முனி அகத்தியர்

ஐந்துதலை நாகமணி அம்பிகையே அருளரசி
அனாதியுருக் கொண்டே மாரி




ஐந்தெழுத்தி ஐம்பொறிச்சி ஐம்பூதம் அறியாத


ஆகாமத்தி ஆரணத்தி



ஐம்புலனை நெறி செலுத்தும் அன்பருக்கு துணைபுரியும்
மக்மாயி அனிமா சக்தி





ஐஞ்சக்தி ஐஞ்சிவனை ஆள்கின்ற ஆதி சக்தி
ஐந்தொழில் செய் கரிய மாரி








என்று பாடி துதிக்க அவரை தமிழைப்பரப்ப அன்னை அனுப்பினாள் என்று தலபுராணம் கூறுகின்றது. ஆகவே கருமாரியம்மனுக்கு தைப்பூசத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.


இனி அம்ம்னின் கோவிலை வலம் வருவோம் ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. அதனுள் நுழைந்தவுட்ன் எதிரே அம்மனின் வேப்பமரம். அரசு வேம்பு மரத்தடியில் வேழமுகத்தோன். அன்னைக்கு வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்த வலம்புரி விநாயகர் அதற்கு பின்புறம் யாக சாலை, உள் பிரகாரத்தை சுற்றி வரும் போது உற்சவர் அம்மனை தரிசிக்கலாம், அம்மையின் சன்னதியின் பின்புறத்திலிருந்து தங்க கவசம் பூண்டுள்ள அன்னையின் விமானத்தை அழகு கண்டு களிக்கலாம். வடக்குப் பிரகாரத்தில் வேற்கண்ணி அம்மையையும், பெரிய கருமாரியம்மனையும், வள்ளி தெய்வாணை சமேத ஆறுமுகனையும் தரிசனம் செய்யலாம். இராஜ் கோபுரத்தின் நுழைவு வாயிலின் ஒரு பக்கம் `நவகிரகங்கள் மறு பக்கம் கருமாரியின் அண்ணன் திருமால் ஏழுமலையானாக கோவில் கொண்டுள்ள சனன்திகள் உள்ளன..வெளிப்பிரகாரம் இப்போது விரிவு செய்யப்பெற்று துர்க்கை, பிரத்தியங்கிரா சனன்தியுடன் விளங்குகின்றது.
கருவறையில் கருமாரி அன்னை ஈருருவாய் காட்சி தருகின்றாள். அமர்ந்த கோலத்தில் தனிப்பெரும் கருணையோடு புன்னகை தவழும் திருமுக மண்டலத்துடன் உடுக்கை, திரிசூலம், வாள், கபாலம் தாங்கி எழிற்கோலம் காட்டுகின்றாள் சிவ சக்தி ரூபமாய் அன்னை. மற்றொரு கோலம் தலை காட்டி உடல் மறைத்த நாரணியாய் மற்றொரு கோலம் கொண்டு அருள் பாலிக்கின்றாள் ஆயிரம் கண்ணுடைய நாயகி, ஆதிபராசக்தி, கண்ணின் கருமணி போன்ற வேற்காட்டுக்கருமாரி. அம்மன் சனனதியின் பிரசாதம் சாம்பல் மற்றும் குங்குமம். அன்னையின் சாம்பல் சிறந்த மருந்து.



திருக்கோவிலுக்கு எதிரே திருச்சாம்பர் திருக்குளம். வேலவன் உருவாக்கியது என்பது ஐதீகம், இக்குளத்தில் ஞாயிரன்று விடியற்காலையில் நீராடி திருநீறு அனீபவர் சகல் செல்வங்களும், கல்வி அறிவும் பெறுவர். ஆடி மாதத்தில் ஆதி வாரம் நீராடுவோர் நீண்ட ஆயுள் பெறுவர். மாசி பௌர்ணமியில் நீராடுவோர் மக்கட்பேறு பெறுவர். மாசி அமாவாசையில் நீராடி நீறு பூசுவோர் பகைவர்களை வெல்வர். தைமாதம் ஆதி வாரம் பூச நட்சத்திரத்தில் நீராடினால் பெறற்கரிய பேறு பெறலாம். தையில் ஞாயிரன்று நீராடுவோர் வல்வினைகள் நீங்கும். அமாவசையில் நீராடினால் பிணி, பில்லி, சூனியம் விலகும். ஆடிப்பூரத்தன்று நீராட நாவன்மை சிரக்கும், கலைகள் விலங்கும். சித்ரா பௌர்ணமியில் நீராட பூரண ஞானம் கிட்டும். புரட்டாசி ஐப்பசி முழுமதி நாட்களில் நீராட ஞானிகளாவர். நவராத்திரியில் நீராட ஆதிசேஷனைப் போல கலைத்திறன் கூடும். பாவம் தொலையும்.


இத்தலத்தின் பெருமை தலபுராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கண்டாலும் பிணிநீங்கும் நிதிபெருகும் கலைஒங்கும்
ஞானமுறும், கருத்துணர்ந்து


விண்டாலும் வாணாட்கள் மிக பெருகும்; செவியுற்றால்
வீரமுறும், வேதை தீரும்

பண்டாலின் கீழமரும் பரமனருள் சிறப்புற்றுப்
பரஞானப் பதமளிக்கும்

மண்டலத்தில் தேவி கருமாரியாளின் புராணச்சீர்
எவராலும் மொழியொணாதே
.

கருமாரி அம்மன் திருக்கோவில் இராஜகோபுரம்



ஐந்தொழில் புரியும் ஆதி சக்திக்கு வருடம் முழுவதும் திருநாளே. தமிழ் புத்தாண்டன்று தங்க கவசத்தில் சிறப்பு மலர் மாலை அலங்காரத்தில் அருட்கோலம் காட்டுகின்றாள் அன்னை. சித்ரா பௌர்ணமியை ஒட்டி மூன்று தின லட்சார்ச்சணையும், தைப்பூசத்தன்று ஒரு நாள் லட்சார்ச்சனையும் நடைபெற்கின்றது. வைகாசி விசாகத்தன்று சீனிவாசப்பெருமாள் கருட சேவை. ஆனி கடை ஞாயிறு தொடங்கி அன்னை கருமாரிக்கு ஆடிப்பெருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறுகின்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் 1008 பால் குட அபிஷேகம், நவ கலசம், சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புற்றலங்காரப் 108 பால்குட அபிஷேகம், படையல் போன்றவையும், வாகன சேவையும், ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை தேர் உலாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மாதம் தோறும் பௌர்ணமியன்றும், புரட்டாசி நவராத்திரி ஒன்பது தினங்களும் மாலை 108 சுமங்கலிகளை கொண்டு குத்து விளக்கு பூஜை நடத்தப்பெறுகின்றது. நவராத்திரி ஒன்பது தினங்களும் உற்சவர் அம்மன் புறப்பாடு வெவ்வேறு விதமான அலங்காரத்தில் நடைபெறுகின்றது.ஐப்பசியில் கந்தர் சஷ்டி திருவிழா சூர சம்ஹாரத்துடனும், திருக்கல்யாணத்துடனும் சிறப்பாக நடைபெறுகின்றது. தனுர் மாதத்தில் காலை சிறப்பு பூஜை. தை மாதத்தில் தைப்பூசத்தை தீர்த்த நாளாக கொண்டு 19 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பெறுகின்றது. காலை மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் அன்னை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா. பல்லக்கு தீர்த்த வாரியும் இறுதி மூன்று நாட்கள் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றது. அம்மனுக்கு தங்கத்தேரும் உள்ளது, ஆங்கிலப்புத்தாண்டன்றும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அம்மனுக்கு. சுதந்திர தின நாள் ஆகஸ்ட் 15ம் நாள் அன்றும், அண்ணா நினைவு நாள் அன்றும் பொது விருந்து நடைபெறுகின்றது. இத்திருக்கோவிலின் சார்பாக பல சமுதாயப்பணிகள் நடைபெறுகின்றன. சமயம் கிடைக்கின்ற போது அன்னையின் தலம் சென்று தரிசித்து அவள் அருள் பெறுங்கள்.

Labels: , ,

Saturday, August 02, 2008

திருஆடிப்பூரம்



ரிஷப வாகனமேறி எழிலாக ஆடிப்பூரத்தன்று

பவனி வரும் சொர்ணாம்பிகை அம்மன்



அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, சில ஆலயங்களில் சக்கரைக் காப்பு, கற்கண்டு காப்பு கூட கண்டிருப்பீர்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.


விரை மலர் குழல்வல்லி



மறைமலர் பதவல்லி



விமலி கற்பகவல்லி







ஆடிப்பூரத்தன்று சந்தனக்காப்பும் வளைகாப்பும்



கண்டருளும் கற்பகாம்பாள் மூலவர்






மஹா திரிபுரசுந்தரி




கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும்




அன்னை திருமயிலை கற்பகாம்பாள்





கற்பகவல்லியின் முன்னழகும் பின்னழகும்


( ஜடாதாரரின் வாம பாக மயிலுக்கு எத்தனை ஜடை அலங்காரம் பாருங்கள்)




ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மையிலங்கு கண்ணிக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகத் ஜனனிக்கு, ஜகன் மாதாவிற்கு, அவளுக்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி.


கரு காக்கும் நாயகி கர்ப்பரட்சாம்பிகை






இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே என்று அபிராமி பட்டர் பாடிய படி அன்னை ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைக்கும் தாயாக கொண்டாடும் நாள். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும், மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும், ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும், புத்தேளிர் கூட்ட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.


சொர்ணாம்பிகை அம்மனின் எழிற்கோலம்


சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.


பசுவேறி அருள் கொடுக்கும் எங்கள் பரமேட்டி




சிவ சொர்ணாம்பிகை



பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. தாங்கள் இப்பதிவில் காணும் திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். சைதை காரணீஸ்வரர் ஆலயத்தில் சொர்ணாம்பிகை அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் அழகையும் கண்டு களியுங்களேன். மேல் மருவத்தூரில் ஆதி பரா சக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

உயர் அரங்கருக்கு கண்ணி உகந்தளித்த

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்

( படத்திற்கு நன்றி குமரன்)

வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடபப்டுகின்றது. ஏனென்றால் இன்று தான் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள், பூமி பிராட்டியார் மண்ணுலகில் உள்ள நாம் எல்லாரும் உய்ய பெரியாழ்வாரின் திருமகளாராய் திருஅவதாரம் செய்து எம்பெருமானுக்கு பாமாலையும், பூமாலையும் சாற்றி , நாம் எல்லாரும் உய்ய வேத சாரத்தை எளிய தமிழில் திருப்பாவையாகப் பாடினார். எனவே வைணவ தலங்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இன்று ( 04-08-08) ஆடிப்பூரத்தன்று அம்பிகையை வழிபட்டு சகல வளங்களும், நலங்களும் பெற பிரார்த்திக்கின்றேன்.

ஓம் சக்தி.

  • Other Articles
  • Unicode enable