நவ துர்காவாக வழிபடும் போது அன்னையை, அகிலாண்ட நாயகியை, ஆதி பராசக்தியை, ஜகத்ஜனனியை, மஹா த்ரிபுரசுந்தரியை
என்ற ரூபத்தில் வணங்குகின்றோம்.
கன்னியாக வழிபடும் போது நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பிகையை அகில உலகத்தையும் ஆண்டு அருளும் அம்மையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து குமாரியாக வழிபடுகின்றோம். இவ்வாறு வழிபட தரித்திர நாசம்.
குமாரியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.
1. குமார்ஸ்ய ச தத்வானி யாஸ்ருஜத்யபி ஸீலயா
காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் ||
நவதுர்கையாக வழிபடும் போது முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை
ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம். சதி தேவியாக தக்ஷபிரஜாபதியின் மகளாகப் பிறந்த அன்னை தக்ஷனின் ஆணவத்தின் காரணமாக பின் அந்த உடலை அழித்துக்கொண்டு பின் பர்வத ராஜ புத்ரியாக, மலையரசன் பொற்பாவையாக, கிரிகன்யாவாக, பார்வதியாக, பிறந்த அன்னையாக, நந்தி வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானின் பத்னியாக வழிபடுகின்றோம். ஷைலபுத்ரியை ஹேமவதி என்றும் அழைக்கிறோம். பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம் ஷைலபுத்ரி துர்காவை.
வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||
என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.
( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )
என்று ரோக நிவாரண அஷ்டகத்தின் முதல் பாடலைப் பாடி மனமுருக துர்க்கா தேவியை வழிபட்டு நன்மையடைவோமாக.
எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் புத்தி ரூபமாக உள்ளனளோ அந்த மஹா சரஸ்வதியை வணங்குகிறோம்.
திருமயிலை கற்பகாம்பாள் அன்னவாகனத்தில் கொலு
திருமயிலையில் நாம் எல்லோரும் உய்ய ஆடும் மயிலாய் உருவெடுத்து ஐயன் தாள் நாடி அர்சித்த நாயகி கற்பகாம்பாள் தினமும் ஒரு கோலத்தில் கொலு விற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். நவராத்திரியின் முதல் நாள் அன்ன வாகனத்தில் தரிசனம் தருகின்றாள். நீரிலிருந்து பாலை பிரித்திடும் பண்பு கொண்டது அன்னப்பறவை. அது போல பாவச்சேற்றில் உழலும் மாந்தர் பக்தியோடு அன்னையை துதிக்கும் போது , அவர்களின் பாவங்களை ஒதுக்கிவிட்டு, பக்தியை மட்டும் போற்றி அவர்களை உய்விக்கும் கருணை அன்னைக்கு உண்டு என்பதை உணர்த்தவே நவராத்திரியின் முதல் நாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகிறாள் விரை ம்லர் குழல் வல்லி மரை மலர் பத வல்லி விமலி கற்பகவல்லி.
கற்பகவல்லியின் பின்னழகு
தாமரை மலர்களால் ஜடை அலங்காரம்
ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம்
(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)
ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம் செய்வது அம்பாளுக்கு நாம் புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும். இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப் அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.
இந்த ஸ்தோத்திரத்தின் முதல் ஸ்லோகத்தினால் அன்னை ஆவாஹனம் செய்யப்பட்டு (வரவேற்கப்பட்டு) மானசீக தியானத்தின் மூலம் ஆசனம் அளிக்கப்படுகின்றாள்.
கல்லோல- உல்லஸித அம்ருத- அப்தி லஹரீ-
மத்யே விராஜன்-மணி-
த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதே
காதம்ப-வாட்-உஜ்ஜ்வலே |
ரத்ன-ஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-மத்யே விமான
உத்தமே சிந்தா-ரத்ன விநிர்மிதம் ஜனனி தே
ஸிம்ஹாஸனம் பாவயே || 1.
அலை பொங்கும் அமிர்தக்கடலின் அலைகளின் நடுவே விளங்கும் மணித்வீபத்தில், கற்பகச்சோலை சூழ்ந்த கதம்ப வனம் விளங்குகிறது. அவ்வனத்தில் ஆயிரக்கணக்கில் இரத்தினத் தூண்கள் அமைந்த சபையின் நடுவில் சீரிய விமானத்தின் கீழே சிந்தாமணியால் வடித்த சிம்மாசனத்தை ஹே தாயே! மனதிற் பாவிக்கிறேன். ( அன்னையே வந்து அமர்ந்து எங்களின் மானசீக பூஜை ஏற்று அருள் புரிவாயாக)
பொருள்: காதம்பவாடீ- கதம்பமரச் சோலை
அன்னை வந்து அமர்ந்தவுடன் அவளது திருக்கோலத்தை வர்ணித்து நம் மனத்தில் இருத்தும் தியானமே இந்த இரண்டாவது ஸ்லோகம்
ஏணாங்க-அநல- பானு-மண்டல-லஸத்-
ஸ்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
பால-அர்க-த்யுதி-பாஸுராம் கர-தலை:
பாச அங்குசௌ பிப்ரதீம் |
சாபம் பாணம்-அபி ப்ரஸன்ன-வதனாம்
கௌஸும்ப-வஸ்த்ர-அந்விதாம்
தாம் த்வாம் சந்த்ரகலா-வதம்ஸ மகுடாம்
சாரு-ஸ்மிதாம் பாவயே II 2.
சந்திரன், அக்னி, சூர்ய மண்டலங்கள் விளங்கும் ஸ்ரீசக்ரத்தின் நடுவில் வீற்றிருப்பவளும், இளம் சூரியன் போன்று ஒளிர்பவளும், திருக்கரங்களில் பாசம், அங்குசம், வில், அம்பு, இவற்றை தரித்தரிப்பவளும், மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன், காவி வஸ்திரம் அணிந்தவளும், சந்திரபிறை அலங்கரிக்கும் கிரீடம் அணிந்தவளும், அழகிய புன்னகை தவழும் முக மண்டலத்துடன் கூடிய உன்னை மனதில் காண்கிறேன்.
ஏணாங்க: - சந்திரன்
நாம் பூஜையின் போது செய்யும் மற்ற உபசாரங்களை மானசீகமாக செய்வது போல மற்ற ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.
இந்த மூன்றாவது ஸ்லோகம் ஆசமநம் அளிப்பதை விளக்குகின்றது.
ஈசாந-ஆதி- பதம் சிவ-ஏக-பலகம்
ரத்ன ssசனம் தே சுபம்
பாத்யம் குங்கும சந்தனாதி-பரிதை:
அர்க்யம் ஸ-ரத்ன-அக்ஷதை: I
சுத்தை: ஆசமநீயகம் தவஜலை:
பக்த்யா மயா கல்பிதம்
காருண்ய அம்ருத வாரிதே தத் அகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம் II 3.
ஈசானன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலியவர்களை கால்களாகவும், சதாசிவன் ஒருவனையே பலகையாகவும் கொண்ட நல்ல இரத்தினமய சிம்மாசனம், ஹே அன்னையே! உனது மகிழ்ச்சிக்காக அமையட்டும். குங்குமம், சந்தனம்இவை கலந்த பாத்தியமும்,(திருப்பாதத்தில்) ரத்தினமாகிய அக்ஷதையுடன் அர்க்யமும் (திருக்கரங்களில்), சுத்த ஜலத்தால் ஆசமநீயகமும் (திருமுடியில்) நான் பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன். ஹே கருணைக் கடலே! இவையெல்லாம் உனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்.
ஈசானாதிபதம்- ஈசானன் முதலியவர்களை கால்களாகவும்,
சிவைக பலகம்- சதாசிவன் ஒருவனையே பலகையாகவும் கொண்ட (இரத்தின சிம்மாசனத்தில்)
அபிராமி அம்மை பதிகம்
காப்பு
தூய தமிழ் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நால்
வாய் ஐங்கரன்தாள் வழுத்துவாம் - நேயர் நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லா வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே! (1)
பொருள்: திருக்கடவூரில் வாழ்கின்ற அபிராமி அம்மையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அருளைப் பொழிபவளே! அமிர்தகடேஸ்வரரின் வாம பாகம் அகலாமல் இருக்கும் அன்னையே! பாற்கடலில் யோக நித்திரை கொள்ளூம் மாயன் திருமாலின் தங்கையே! உன்னை வணங்கும் அன்பர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கு அம்மா என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.
காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்
கர்ண குண்டலுமு(ம்) மதிமுக மண்டலம் நுதற்
கத்தூரிப்பொட்டும் இட்டுக்
கூர் அணிந்திடுவிழியும் அமுத மொழியும் சிறிய
கொவ்வையின் கனி அதரமும்
குமிழ் அனைய நாசியும் குந்தநிகர் தந்தமும்
கோடு சோடான களமும்
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணி நூபுரப்பாதமும்
வந்து எனது முன்னின்று மந்தகாசமுமாக
வல்வினைகள் மாற்றுவாயே
ஆரமணி வானிலுறை தாரகைகள் போல நிறை
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே! (2)
பொருள்: வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் போல பிரகாசிக்கும் மணி மாலைகள் பூண்ட அபிராமி அம்மையே! அமிர்த கடேஸ்வரரின் வாம பாகம் அகலாதவளே!. கிளியைத் திருக்கரத்தில் எந்தியவளே! அருளை வழங்கும் அபிராமியே! மேகம் போன்ற கரிய கூந்தல், அதில் மலர் மாலைகள், வில் போன்ற கரிய புருவங்கள், காதுகளில் விளங்கும் குண்டலங்கள், அழகிய திருமுகத்தில் கஸ்தூரிப்பொட்டு, அமுத மொழி, கொவ்வைப்பஜம் போன்ற இதழ்கள், குமிழம்பூ போன்ற நாசி, சங்கு போன்ற கழுத்து, தளராத திருத்தனங்கள், மெல்லிய இடையில் மேகலை , திருப்பாதங்களில் நூபுரங்களுடன் அடியேன் முன் புன்னகையுடன் தோன்றி என் கொடிய வினைகளை அகற்றி ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.
(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான உரையை காண அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி அம்மனின் பதிகங்கள்" புத்தகத்தைக் காணலாம்)
*************************
நமது பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தீமையை நன்மை அழித்து எல்லாரும் சுகமாக விளங்குவதை குறிக்கும் வகையில் நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் அம்மன் தவம் இருந்து பத்தாம் நாள் விஜதசமியன்று தீமையாம் மகிஷனை வதம் செய்ததை கொண்டாடுகிறோம். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தசரா என்று சிற்ப்பாக கொண்டாடுகின்றனர், இங்கு சாமுண்டீஸ்வரி இந்த பத்து நாட்களிலும் போற்றி வணங்கப்படுகின்றாள். கேரளாவில் விஜயதசமியன்று அக்ஷராப்பியாசம் என்று குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை துவக்குகின்றனர். குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவு கர்பா என்னும் நடனமாடி அன்னையை வழிபடுகின்றனர். வட நாட்டில் ஒரு சாரார் கடுமையான விரதம் இருந்து அன்னையை நவ துர்காவாக வழிபடுக்ன்றனர். ஒரு சாரார் இதை இராம்லீலாவாக , இராமர், இராவணன வெற்றி கொண்டதை கொண்டாடுகின்றனர். ஒன்பது நாட்கள் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர் பத்தாம் நாள் விஜய தசமியன்று, இராவணன், மேகநாதன்( இந்திரஜித்), கும்பகர்ணன் பொம்மைகளை கொளுத்துகின்றனர். வங்காளம் முதலான கிழக்குப் பகுதியில் துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு. சஷ்டியன்று அன்னை துர்க்கை திருக்கயிலாயம் விடுத்து பூலோகத்திற்கு தன் அன்னை இல்லத்திற்கு தன் மகள்கள் மஹா லக்ஷ்மி மற்றும் மஹா சரஸ்வதி, மகன்கள் கணேசன் மற்றும் கார்த்திகேயன்(முருகர்) மற்றும் கணேசரின் மனைவி அபராஜிதாவுடன் எழுந்தருளி அருள் பாலித்து பூஜையை ஏற்றுக்கொள்கின்றாள். விஜய்தசமியன்று பின்னர் அன்னை திருக்கயிலாயம் திரும்பிச்செல்கின்றாள்.
நவராத்திரியின் போது தேவி மகாத்மியம் என்றும் துர்கா சப்தஸதீ என்றழைக்கபப்டும் ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், லலிதா த்ரிசதீ, அபிராமி அந்தாதி மற்றும் அன்னையின் பல்வேறு தோத்திரங்களை படிப்பது மிகவும் உத்தமம்.
அம்மன் அருள் தொடரும். . . . .. ... .