Friday, October 08, 2010

நவராத்திரி அலங்காரங்கள் -1

நவராத்திரி முதல் நாள்

ஆதி பராசக்தி


மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்களில் சரத் ருது என்று அழைக்கப்படும் குளிர்காலத்தில் அம்மனுக்காக கொண்டாடப்படும் நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது சாரதா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகின்றது. நமது புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை அன்று தொடங்கி நவமி வரை இவ்விழா கொண்டாடப்படுகின்றது. பத்தாம் நாள் தசமியன்று அம்மை நாம் எல்லாம் உய்ய மஹிஷாசூரனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்ற விஜயதசமி கொண்டாடப்படுகின்றது.


இந்த நவராத்திரி நாட்களில் தினமும் அம்மனை எவ்வாறு வணங்கலாம் என்பதையும் முதலில் காணலாம். சில இடங்களில் அன்னையை நவ கன்னிகையாகவும் வணங்குகின்றனர், சில இடங்களில் அன்னையை நவ துர்க்கையாகவும் வணங்குகின்றனர்.

10 வயது நிரம்பாத கன்னியையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு. அது போல பார்வதி தேவியின் பல்வேறு நிலைகளில் அம்மையை துர்கையாக வழிபடுவது நவதுர்கா வழிபாடு.

நவ கன்னிகையாக வழிபடும் போது

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி

இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி

மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி


நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி


ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா

ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா

ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா என்று வணங்குகின்றோம்.

திரு நடராஜ தீக்ஷிதர் அவர்கள் அன்பு கூர்ந்து நவகன்னிகளின் ஸ்லோகங்களை கொடுத்து உதவினார் அவருக்கு மிக்க நன்றி. பல அரிய தகவல்களைக் கொண்டுள்ள அவரது நவராத்திரி பதிவைக் காண இங்கு செல்லவும் நவராத்திரி

நவ துர்காவாக வழிபடும் போது அன்னையை, அகிலாண்ட நாயகியை, ஆதி பராசக்தியை, ஜகத்ஜனனியை, மஹா த்ரிபுரசுந்தரியை

முதல் நாளில் - ஷைலபுத்ரி
இரண்டாம் நாள் - பிரம்மசாரிணி
மூன்றாம் நாள் - சந்தரகாந்தா

நான்காம் நாள் - கூஷ்மாண்டா

ஐந்தாம் நாள் - ஸ்கந்த மாதா
ஆறாம் நாள் - காத்யாயனி

ஏழாம் நாள் - காலராத்ரி


எட்டாம் நாள் - மஹா கௌரி


ஒன்பதாம் நாள் - சித்திதாத்ரி என்ற ரூபத்தில் வணங்குகின்றோம்.

நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பிகையை அகில உலகத்தையும் ஆண்டு அருளும் அம்மையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து குமாரியாக வழிபடுகின்றோம். இவ்வாறு வழிபட தரித்திர நாசம். குமாரியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.

1. குமார்ஸ்ய ச தத்வானி யாஸ்ருஜத்யபி ஸீலயா
காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் ||

(ஒரு குழந்தையைப் போல லீலா வினோதங்களைச் செய்பவளை, பிரம்மன் முதலான தேவர்களை, எந்த சக்தி தனது லீலைகளினால் சிருஷ்டிக்கிறதோ, அந்த குமரியாகிய சக்தியை வணங்குகிறேன்.)


ஷைலபுத்ரி துர்கா

முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம். சதி தேவியாக தக்ஷபிரஜாபதியின் மகளாகப் பிறந்த அன்னை தக்ஷனின் ஆணவத்தின் காரணமாக பின் அந்த உடலை அழித்துக்கொண்டு பின் பர்வத ராஜ புத்ரியாக, மலையரசன் பொற்பாவையாக, கிரிகன்யாவாக, பார்வதியாக, பிறந்த அன்னையாக, நந்தி வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானின் பத்னியாக வழிபடுகின்றோம். ஷைலபுத்ரியை ஹேமவதி என்றும் அழைக்கிறோம். பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம் ஷைலபுத்ரி துர்காவை.

வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||
என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.
( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )

இன்றைய பதிவில் நாம் திருமயிலையில் கற்பகாம்பாள் நவராத்திரி முதல் நாள் யதாஸ்தானத்திலிருந்து நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எழுந்தருளும் அழகான காட்சிகளை கண்டு களிப்போமா? அன்பர்களே.

யதாஸ்தானத்திலிருந்து அன்ன வாகனமேறி நமக்கு அருள புறப்படுகின்றாள்
அன்னை கற்பகவல்லி


அன்னையுடன் கொலுவிருக்கும் மஹா சரஸ்வதி


அன்னையுடன் கொலுவிருக்கும் மஹா லக்ஷ்மி

ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலை அலங்காரம்

திருக்கயிலை நாதருக்கு கோல அலங்காரம்

இந்த அலங்காரம் மட்டுமல்ல அம்மன் மண்டபத்தில் பொம்மை கொலுவும் உள்ளது. அதில் தேர் கூட்டமும் , கிராமமும் அருமை


அம்பாள் ஆடிக்கொண்டு கொலு மண்டப பிரவேசம்


கொலு மண்டபத்திற்குள் ஆனந்தமாக ஆடி வரும்
அம்மனை தரிசிக்க காத்திருக்கும் அன்பர் கூட்டம்

கொலு மண்டபத்தில் அன்னைக்கு
லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை
குங்குமம் மற்றும் மலர்கள் கொண்டு அன்னைக்கு அர்ச்சனை நடைபெறுகின்றது.

அம்மனின் முதல் நாள் கொலு
அன்ன வாகன சேவை

அன்ன வாகனத்தில் ஆனந்தமாய் தரிசனம் அருளுகின்றாள் விரைமலர் குழல்வல்லி மறைமலர் பதவல்லி விமலி கற்பகவல்லித்தாயார். அன்னம் எவ்வாறு பாலிலிருந்து நீரை பிரித்து விடுகின்றதோ அது போல நாமும் நல்லவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகின்றாளோ அன்னை.

அன்னையின் பின்னழகு

மேற்கு மாம்பலம் சத்யநாராயணர் ஆலயத்தில் மஹா விஷ்ணு நவராத்திரி நாட்களில் தசாவதார கொலு தந்தருளுகின்றார். இன்றைய தினம் மச்சாவதாரக் கோலத்தில் பெருமாள் உபய நாச்சிமார்களுடன் உடன் பெரிய பிராட்டியும் சேவை சாதிக்கின்றாள்.

பெரிய பிராட்டியுடன் சத்யநாராயணர்
மச்சாவதார சேவை
-->
*********

ரோக நிவாரணி அஷ்டகம்


பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க் கையளே
ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
சங்கரி யுன்னைப் பாடிடுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே
தளிர்த் திடுஜோதி யான வளே |
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (1)

என்று ரோக நிவாரண அஷ்டகத்தின் முதல் பாடலைப் பாடி மனமுருக துர்க்கா தேவியை வழிபட்டு நன்மையடைவோமாக.

அம்மன் அருள் வளரும்

Labels: , , , , ,

2 Comments:

Blogger Unknown said...

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நவ (9) கன்னிகை சன்னிதானம் எங்கே உள்ளது (சப்த - 7 கன்னிகை அல்ல)....

3:21 PM  
Blogger S.Muruganandam said...

அன்னை காமாக்ஷி தவம் செய்யும் சென்னை மாங்காட்டிலே வெளிப் பிரகாரத்தில் நவ துர்க்கைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை அடியேன் தரிசனம் செய்துள்ளேன்.

8:04 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal