Thursday, October 11, 2007

Navarathri # 4 ( Sornambika Navaratna Malai)


சொர்ணாம்பிகை  நவரத்ன மாலை

ஆக்கும் மணி மாலை ஆணை முகன் தாள் பணிந்து
கோக்கும் படி சிந்தை கூடுவாம் - பூக்கும்
நற்குடி வாழ் நனி நல்ல திருக் காரணிப்
பொற்கொடி சூடும் பொருட்டு.

மாணிக்கம்

நிழலாய் விளங்கி நின்றென்றும் நினையே நெஞ்சில் நினைவேற்கு
நிதியாய் நோற்றுப் பணிகின்ற நிட்டை நிதஞ்சேர் நான்முகியே
குழகன் அணியுங் கொன்றைத்தார்க் குழலாய் கோலத்தொழிலோடு
குறையில் மாணிக்கமே சூட குன்றாக் குழையைக் கொண்டனையோ
வழகார் இதயம் வாழ்கின்றாய் வரையோன் பெற்ற வார்ச் சடையாய்
வளங்கொள் நின்றன் விளையாட்டின் வண்ணம் உலகாம் வான்முகிலே
அழகார் மதுரை மீனாட்சி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.


முத்து
பணிகொள் கற்றைப் புனற் குழலாய் பசுவேன் போற்றும் பாங்குடையாய்
படரும் ஞானத் திருநீற்றால் பாசந் தொடராப் பார்ப்பதியே
பிணி கொள் வாழ்வைத் துறப்போரின் பிறப்பைப் போக்கும் பிஞ்சகியே
பிறையை சூடும் பெருமாட்டி பீடத்தமரும் பூங்கொடியே
மணிகொள் கண்டன் அணிகின்ற மயிலே முத்தே மாமையளே
மடங்கொள் அனமே மலைச் செல்வி மட்டில் முகிழ்த்தாய் முரலுற்றே
அணிகொள் தில்லைச் சிவகாமி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே




பவளம்துறவோ ரென்னும் ஞாயிற்றைத் துணையா யீந்த தேமொழியே
துதிக்குந் திங்கள் அணிக் துன்பங்களையுங் து‘யவளே
பிறவா தென்றும் வாழ்கின்ற பிடியே செவ்வாய்ச் செம்பவளம்
பிறங்கும் போதப் பொருள் தந்தே பித்தன் பரவும் அற்புதமே
மறவேன் ஞானந் தந்தென்றும் மயல் தீர்த்தாளும் நற்குருவை
மதிக்கும் வாழ்வே விடி வெள்ளி மாவாய்ச் சனியேன் நின்னருளால்
அறவோர் காஞ்சி காமாட்சி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.



மரகதம்
மடியாய் மாளும் வகை தந்து மயலார் நீங்குந் தன்மை தந்தாய்
மதங்கொள் வேகங் கெடுத்தாளும் மன்னோர் மரையே மாதவமே
மிடியார் மாளும் நிலை தந்து மிகைகொள் அச்சம் போக்கியருள்
மிளிரும் வண்ண மலர்ப்பாதம் மின்னேர் மணியே மரகதமே
துடியார் தையால் துரியத்தே துணையாய் தோன்றும் தண்ணளியே
துதிசெய் நெஞ்சந் திகழ்கின்றாய் தொன்னேர் நெறி கொள் தோத்திரத்தாய்
அடியார் ஆரூர்க் கமலாட்சி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.


பத்மராகம்
நமனை நசுக்கும் நாதகீதம் நயந்து நானும் பெற்றிடவே
நலங்கொள் ஞாலந்தெளிவிக்கும் நல்லாய் நடங்கொண் டாடுகின்ற
குமர மணியைக் குன்றமுறுங் குறவர் கோவை நித்தியத்தை
குருவாய் யீந்தாய் குணக்குன்றே குன்றாக் கனகக் குண்டலியே
வெமர வணியும் வார்குழலில் வெதும்பா வண்ணப் பத்மராகம்
வெளியேன் சூட்ட விழைகின்றேன் வெள்ளை உளஞ்செய் வாலையளே
அமரர் கயிலைப் பார்வதியே அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே


வைரம்உரனார் உள்ளம் உவந்தீயும் உரகம் ஆடும் வார்ச் சடையாய்
உவணம் ஊர்ந்தோ னிளையோளே ஊழை ஒறுத்தாய் உத்தமியே
சுரனாய் வாழுஞ் சுகம் வேண்டேன் சுடரும் வைரம் தேர்ந்தணியாய்
சுவையூ றொலிகொள் நுகரேசை சூழும் புலன் சேர் சூலியளே
நரனாய் என்றும் பிறப்புற்றால் நலமே நின்னை யேத்திடவே
நவையில் ஞானம் நயந்தேற்கு நல்கும் நடனார் நாயகியே
அரனார் காசி விசாலாட்சி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே



நீலம்
உமிழ்ந்தாய் உலகம் பதினான்கை உவக்கும் வண்ணம் ஒண்ணுதலே
உறவாந் தாய்நீ மகவேனிம் உள்ளம் உறையும் உட்பொருளே
இமிழ்ந்தார்த் தெழும்புங் கடல் நீலம் இழையச் சூடும் நன்மணியே
இகங்கொள் வாழ் வின் இயல்பாகும் இன்னல் கலைளயும் இன்னமுதே
தமிழ்ப்பா வளித்துத் தெளிவித்தாய் தனயன் தேருந் தாயலவோ
தனஞ் சேர் தான்யம் தருகின்றாய் தண்டாமரையே தாழ்குழலே
அமிழ்தக் கடவூர் அபிராமி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே



கோமேதகம்
சிலையை யெடுத்த மன்மதனைச் சினந்து சுட்ட சங்கரனார்
சிறிதும் ஆலம் விழுங்காதே சித்தஞ் செய்தநற் சங்கரியே
மலையை யெடுத்த மாவரக்கன் மதத்தோள் நைய ஊன்றியதுன்
மலராய்த் தோன்றும் பதமென்று மறைகள் மொழியும் மேன்மையளே
கலையைக் கொழிக்கும் தண் கதிரின் கவிணைக் கூறாய் கூன்பிறையைக்
கனிந்தே சூடும் கலாவல்லி கோமே தகங் கொள் கோகிலமே
அலைசூழ் மயிலை கற்பகமே அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே


வைடூரியம்
நளிகொள் நின்னை நாடுகின்ற நசையை யென்றும் நல்கிடுவாய்
நடஞ்செய் கோனை நினைவார்க்கு நாளும் நிறைசேர் நாரியளே
களிகொள் உள்ளந் தூய்மையுறக் கருணை தந்தீர்த் தாள்பவளே
கனலும் மண்ணும் குளிர்கின்ற காற்றும் புனலும் கூடுகின்ற
வெளிகொள் பஞ்ச பூதமுறும் வினையேன் வாழ்வில் வாழ்பவளே
விரைகொள் பாதாம் புயத்தாளே வைடூரியங் கொள் வைணவியே
அளி கொள் நெல்லை காந்திமதி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே


நூற்பயன்:
பத்தியால் அன்றிசேர் சொற்காகி பாங்கொடே
உத்தியால் செய்திடா ஒண்மணிமாலையாய்
கத்திடுங் கார்கடல் சூழுல காள்பவர்
நித்தமும் நாரி கொள் நெஞ்சினால் நல்லவரே.



* * * * * * *

2 Comments:

Anonymous Anonymous said...

பக்தி பூக்கும் ungal muyachi vertri adayadum

9:14 AM  
Blogger S.Muruganandam said...

Thank you anandrey.

4:41 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal